சென்னை, செப்.04.
சென்னையில் தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பன்னாட்டு அரிமா சங்கம் 3241-சி சார்பில் சூளைமேடு லால் சந்த் மிலாப் சந்த் மேல்நிலைப்பள்ளி மற்றும் சென்னை சங்கர நேத்ராலயா கண் வங்கி இணைந்து கண்தான விழிப்புணர்வு நடைபயணப் பேரணியை நடத்தின.
அரிமா சங்க மாவட்டத் தலைவர் லயன் வி.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சென்னை மாநகராட்சி 109-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம் மற்றும் அரிமா சங்க முதன்மை துணை மாவட்ட ஆளுநர் லயன் பி.என்.எஸ். உதயசூரியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய லயன் வி.ரவிச்சந்திரன், கண்களின் தேவை அதிகமாக இருந்தாலும், தானமாக கிடைக்கும் கண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, கண்தானம் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாமன்ற உறுப்பினர் சுகன்யா செல்வம், ரவிச்சந்திரன் தம்பதியின் மகள் சாருமதியின் கண்தானத்தை நினைவுகூர்ந்து பேசினார்.
மேலும், பள்ளியில் கண்தான விழிப்புணர்வுக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளித் தாளாளர் ஷோபா தெரிவித்தார். நிகழ்ச்சியில் அரிமா சங்க நிர்வாகிகள், சங்கர நேத்ராலயா கண் வங்கி பொறுப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



