திண்டுக்கல், ஜுலை 17 –
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த கண்ணாபட்டி அருகே வளைவு முனியாண்டி கோவில் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான தார் ஆலை உள்ளது. தார் தயாரிக்கும் இந்த ஆலையில் இப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இதே தார் ஆலையில் வத்தலகுண்டு அடுத்த கோம்பைபட்டியை சேர்ந்த ராஜாங்கம் (35) என்பவர் நேற்று வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் இயக்கி தார் ஆலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் எதிர்பாராமல் ஜெனரேட்டரிலிருந்து சென்ற மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாங்கம் என்பவரை அங்குள்ள டிப்பர் லாரி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் வளையப்பட்டி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மகேஸ்வரி (30) விருவீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் தார் ஆலையில் உயிரிழந்த ராஜாங்கம் என்பவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஜீவா (13) தீனா (7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தார் ஆலை உரிமையாளர் பேச்சுவார்த்தைக்கு வராததாலும், உயிரிழந்த ராஜாங்க குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரியும் ராஜாங்கத்தின் உறவினர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவரின் உடலைப்பெற்றுக் கொள்வோம் என போராட்டம் நடத்தி வரும் சம்பவம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.



