தேனி, ஜூன் 8 –
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனம் மற்றும் அலட்சியப் போக்கால் சுகாதார சீர்கேட்டிற்கு ஆளாகி நோய் பாதிப்பிற்கு உள்ளாகும் சூழல் உள்ளது. பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளீன் & கேர் நிறுவனத்திற்கு பாதாள சாக்கடை ஒப்பந்த பணி வழங்கப்பட்டு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பாதாள சாக்கடை இணைப்பு மற்றும் பாதாள சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்யும் பணிகளை கிளீன் & கேர் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதாள சாக்கடை இணைப்பு வேண்டி நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்து அவற்றிற்கு உரிய கட்டணத்தை செலுத்திய போதும் தனியார் நிறுவனத்திற்கு தனியாக ஆயிரக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவி வருகின்றது. நகராட்சி பணியாளர்களான குழாய் திருகி பணியில் ஈடுபட்டு வரும் நாகராஜ் ஆறுமுகம் மற்றும் டிரெய்னேஜ் கிளீராக பணிபுரியும் முருகன் மூலம் பணம் கொடுத்தால் மட்டுமே பணியாளர்கள் பணி மேற்கொள்கின்றார்கள், அவர்கள் எதிர்பார்த்த தொகையை கொடுக்க வில்லை என்றால் கிடப்பில் போட்டுவிடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டால் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.
நகராட்சி பொறியாளர் மோகன்ராஜ், பிட்டர் திருவாசகத்தை கையில் வைத்துக் கொண்டு அவர் கொடுக்கும் (லஞ்சம்) பைல்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நகராட்சி பணியாளர்கள் ஆறுமுகம், நாகராஜ், (குழாய் திருகி) முருகன் (டிரெய்னேஜ் கிளீனர்) ஆகியோர் மூலம் பணி மேற்கொண்டு வருகின்றனர். பாதாள சாக்கடை அடைப்பு நீக்கப் பணியின் போது பணியாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவது கிடையாது.
பெரிய குளம் நகராட்சிக்கு உட்பட்ட காயிதே மில்லத்நகர் பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவி வருகின்றது. அவற்றை சரி செய்ய முறையிட்டால் STP மோட்டார் பழுதாகி உள்ளது என்றும், இவற்றை நகராட்சி பணியாளர்கள் மூலம் சரி செய்ய முடியாது, ஒப்பந்த பணியாளர்கள் தான் சரி செய்ய வேண்டும் அவர்கள் பணி மேற்கொள்ளும் வரை பொதுமக்கள் அமைதியாக இருங்கள் என பொறியாளர் மோகன்ராஜ் தெரிவித்துள்ளாராம். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள தோடு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடி தலையீடு செய்து குறிப்பிட்ட மூன்று நபருக்கு ஆதரவாக லஞ்ச லாவண்ய போக்கிற்கு இடமளிக்கும் வகையில் செயல்பட்டு வரும் நகராட்சி பொறியாளர் மோகன்ராஜ் மீது நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும், மோகன்ராஜ் பொறுப்பேற்ற பின் பெரிய குளம் நகராட்சி பகுதியில் வழங்கப்பட்ட புதிய பாதாள சாக்கடை இணைப்புகள் மற்றும் அடைப்பு நீக்க பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



