குளச்சல், டிச. 4 –
மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் கிரி (56). இவர் மருத்துவமனைகளுக்கு உபகரணங்கள் விற்பனை செய்யும் பிரதிநிதியாக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் கிரி மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று விட்டு, வெளியில் வந்து தனது பைக்கை எடுக்க முயன்றார். அப்போது பின்னால் நின்ற ஒரு புதிய நீல நிற ஸ்கூட்டியை இரண்டு வாலிபர்கள் இயக்கினர். அந்த நேரம் பைக்குகளை எடுப்பது தொடர்பாக கிரிக்கும் வாலிபர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் வாலிபர்கள் பைக்கில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.
எனினும் ஆத்திரம் தீராத இரண்டு வாலிபர்கள் அந்த நம்பர் இல்லாத புதிய ஸ்கூட்டியில் பின் தொடர்ந்து சென்று பிள்ளையார் சந்திப்பு என்ற இடத்தில் கிரியை வழி மறித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து தகராறு செய்து கிரியை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் காயமடைந்த கிரி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து புதிய ஸ்கூட்டியில் தப்பி சென்ற இரு வாலிபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


