கன்னியாகுமரி, ஆக. 25 –
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் விடுத்துள்ள அறிக்கையில்: ராமநாதபுரம் பகுதியில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதியை ONGC நிறுவனத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
சூழலியலுக்கும் வாழ்வியலுக்கும் பெரும் அச்சுறுத்தலான இந்த திட்டத்தை பொதுமக்கள் கருத்து கேட்பு எதுவும் நடத்தாமல் இம்மண்ணில் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு செய்கிறது.
ஏற்கனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடற்பரப்புகளை ஆக்கிரமிக்கும் வகையில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான திட்டத்துடன் ONGC நிறுவனம் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு அவற்றிற்கான முன்னோட்டமாகவே தெரிகிறது. இத்திட்டம் தொடர்பாக மாநில அரசு எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காதது இதற்கு இவர்களும் உடந்தையோ என்ற சந்தேகத்தை தருகிறது.
எனவே, மாநில அரசு உடனடியாக இந்த மக்கள் விரோத, சூழலியல் விரோத திட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக வலுவான எதிர்வினைகளை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பில் இத்திட்டங்களுக்கு எதிராக மக்களை சந்தித்து விழிப்புணர்வு பரப்புரைகள் செய்து வருகிறோம். அதன் தொடர்ச்சியாக பெரும் மக்கள் திரள் போராட்டங்களையும் முன்னெடுப்போம். இந்த அழிவு திட்டங்களை முழுமையாக விரட்டியடிக்கும் வரை களத்தில் மக்களோடு நின்று போராடுவோம் என தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



