நாகர்கோவில், ஆக. 28:
ஸ்ரீ நாராயண குருவின் 172-வது பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மருந்துவாழ் மலையில் இருந்து தொடங்கிய ஸ்ரீ நாராயண குரு ஜோதி தொடர் ஓட்டத்தில் திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.
நேற்று காலை 6 மணிக்கு மருந்துவாழ் மலை சதய பூஜை சங்க வளாகத்தில் இருந்து ஜோதி தொடர் ஓட்டம் புறப்பட்டது. கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஈத்தங்காடு, வழுக்கம்பாறை, சுசீந்திரம் வழியாக நடைபெற்ற ஜோதி ஓட்டம் கோட்டாறு நாராயண குரு மணிமண்டபத்தை சென்றடைந்தது. அங்கு ஜோதியை ராஜப்பா பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் நாராயண குரு மணிமண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் நாராயண குரு திருமண மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு குழுத் தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். நாராயண குரு மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் அவ்வை சிதம்பரம் அறிமுக உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் ஸ்ரீ நாராயண குருவின் சமூக சீர்திருத்தம், சமத்துவம், கல்வி மற்றும் மனிதநேயக் கொள்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தி விழாவையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.



