கன்னியாகுமரி, பிப். 3 –
தென்னை மற்றும் வாழை பயிர்களை அதிகமாக பாதிக்கும் காண்டாமிருக வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த பக்கெட் டிராப் (Bucket Trap) முறையை பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கான செயல்விளக்க நிகழ்ச்சி சித்தரேவு கிராமத்தில் நடைபெற்றது.
இந்த செயல்விளக்கத்தை மதுரை வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த எஸ்.ஆகாஷ் நடத்தினார். நிகழ்ச்சியில், காண்டாமிருக வண்டு பயிர்களின் மையப்பகுதியில் புகுந்து இலைகள் மற்றும் வளர்ச்சிப் பகுதிகளை சேதப்படுத்துவதால் மகசூல் பாதிக்கப்படுவதாக விளக்கப்பட்டது.
மேலும், பெரோமோன் அடிப்படையிலான பக்கெட் டிராப் ஒரு எளிய, குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு மேலாண்மை முறையாகும் என எடுத்துரைக்கப்பட்டது. பக்கெட் டிராப் அமைக்கும் முறை, பராமரிப்பு மற்றும் வயலில் பொருத்த வேண்டிய இடைவெளிகள் குறித்து நடைமுறையாக காண்பிக்கப்பட்டது.
இதனுடன், காண்டாமிருக வண்டு மேலாண்மை குறித்த விளக்கக் கையேடு (Leaflet) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, அவர்கள் தங்களது வயல்களில் இம்முறையை எளிதாக பின்பற்ற உதவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி, தங்களது சந்தேகங்களை கேட்டறிந்தனர்.
இம்முறையை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் ஒரு பகுதியாக பயன்படுத்தினால், பயிர் பாதுகாப்புடன் கூடிய நிலையான உற்பத்தி பெறலாம் என எஸ்.ஆகாஷ் தெரிவித்தார்.



