நாகர்கோவில், மார்ச் 19 –
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நாகர்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித் குமார் தலைமையில் உட்கோட்ட முகாம் அலுவலகத்தில் வைத்து நாகர்கோயில் உட்கோட்ட எல்லை பகுதிகளில் உள்ள அச்சக உரிமையாளர்கள் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுடன் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் நடைமுறைக்கு வரப்பெற்றதால் தேர்தல் காலங்களில் அச்சகங்களில் எந்த மாதிரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தல் காலங்களில் தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்ட தங்கள் அச்சக பணிகளை செய்து கொள்ள வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, அச்சகங்கள் தேர்தல் தொடர்பான நோட்டீஸ்கள் மற்றும் போஸ்டர்களை அச்சிடும்போது, பிரசுரிப்பாளர் மற்றும் அச்சிடுபவரின் விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். அச்சிடப்பட்ட ஆவணங்களின் நகல்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். இவற்றுக்குத் தவறினால், தேர்தல் ஆணையத்தின் கடுமையான நடவடிக்கைகளுக்கு (சிறைத்தண்டனை உட்பட) உள்ளாக நேரிடும்.
அச்சிடும் பணிக்கு முன், பிரசுரிப்பவரிடமிருந்து உரிய அடையாளச் சான்றுடன் முறையாக நிரப்பப்பட்ட உறுதிமொழிப் படிவத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். விதிமுறைகளை மீறி அச்சிடப்பட்டால், சம்பந்தப்பட்ட அச்சகத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.



