நாகர்கோவில், ஜுன் 06 –
வெள்ளுடை அணிந்த திருவள்ளுவரை தமிழக மக்களுக்கு நினைவுபடுத்திடும் வகையில், தமிழ் நாட்டில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை மீண்டும் முன்பு இருந்தது போல் திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக மாற்றிட வேண்டும் என்று, அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து முத்துக்குமார் தெரிவித்துள்ளதாவது: திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச நினைப்பதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கவனர் மாளிகையில் காவி உடை அணிந்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தியதை அமைச்சர்கள் அருண் ராஜ் மற்றும் வன்னியரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்தோடு தங்கள் கடமை முடிந்தது என்று அமைச்சர்கள் இருந்து விடக்கூடாது.
நாம் தமிழக அரசிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், தமிழகத்தில் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை முன்பு இருந்தது போல் திருவள்ளுவர் போக்குவரத்து கழகமாக மாற்றிட வேண்டும். மேலும் வெள்ளுடை அணிந்த திருவள்ளுவரை தமிழக மக்களுக்கு நினைவு படுத்திடும் வகையில் பேரூந்துகளில் திருவள்ளுவர் புகைப் படங்களை வைத்திட வேண்டும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



