தருமபுரி, ஆகஸ்ட் 03 –
தருமபுரி மாவட்டம் அ.கொல்லஅள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், 1987 முதல் 1994 வரை அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பல்வேறு பிரிவுகளில் ஒன்றாகப் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே இடத்தில் ஒன்று கூடினர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதுடன், நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர்களை கட்டித் தழுவி நலம் விசாரித்து, பழைய நட்பை மீண்டும் புதுப்பித்துக் கொண்டனர். ஆசிரியர்களின் வழிகாட்டுதல், வகுப்பறை அனுபவங்கள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட இனிய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சியடைந்தனர்.
மேலும், ஒருவருக்கொருவர் குடும்ப நலம், வேலைவாய்ப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் குறித்து உரையாடி மகிழ்ந்தனர். நண்பர்கள் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பு நிகழ்ச்சி அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டு, இதுபோன்ற சந்திப்பு நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் நடத்துவது என உறுதியேற்றனர். மேலும், பள்ளி மற்றும் சமுதாய நலன் சார்ந்த பல்வேறு சேவைகளை மேற்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது என்று உறுதி எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சி கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.



