நாகர்கோவில், ஜூன் 29 –
தோவாளை தாலுகா அனந்தபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட நிலங்கள் ‘நாராயண பிள்ளை நினைவு அறக்கட்டளை’ என்ற பெயரில் உள்ளன. இந்த நிலம் சிதறால் பகுதியை சேர்ந்த வாமதேவன் என்பவரின் மகன் வழக்கறிஞர் ராஜேஷ், மற்றும் ஆஷிஷ் அர்ஜுனன் நாயர் ஆகியோரது பெயரில் கூட்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் ராஜேஷ் தனது சுயலாபத்திற்காக எவ்வித அரசு அனுமதி இன்றி இந்த நிலத்திலிருந்து தனது செங்கல் சூளைக்கு சட்ட விரோதமாக செம்மண் எடுத்து வந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்த தோவாளை தாசில்தார் சிவகலா சம்பந்தப்பட்ட இடத்தை நேரத்தில் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 13.6.2026 அன்று தாசில்தார் முன்னிலையில் நடத்தப்பட்ட அளவீட்டில் சுமார் 350 யூனிட் அதாவது 1140 கன மீட்டர் மண் சட்ட விரோதமாக தோண்டி எடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் அரசுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதை அடுத்து அந்த நிலத்திற்கு தாசில்தார் சீல் வைத்தார். இது குறித்து தாசில்தார் அளித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா விசாரணை நடத்தி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது மற்றும் சட்ட விரோதமாக மண் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக வழக்கறிஞர் ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


