சென்னை, ஜூலை 04 –
வேளச்சேரி பிரசாந்த் மருத்துவமனையின் எலும்பியல் நிபுணர் டாக்டர் எஸ். ஆறுமுகம் தென்னிந்தியாவிலேயே 1000க்கும் மேற்பபட்ட ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து சாதனை படைத்துள்ளார். பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் டாக்டர் ஆறுமுகத்திற்கு இந்தக் கெளரவத்தை வழங்கினார். இதற்கான பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகை ராதிகா சரத்குமார் கலந்து கொண்டார்.
மேலும், விழாவில் பிரசாந்த் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் சி. கீதா ஹரிப்ரியா, நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜி. கோபாலசாமி, இயக்குநர்கள் டாக்டர் பிரசாந்த் கிருஷ்ணா, டாக்டர் சம்ஹிதா மோதூரி மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சாதனையை தொடர்ந்து பிரசாந்த் மருத்துவமனை இரண்டாவது 4-ம் தலைமுறை வேலிஸ்ட் (‘VELYST)ரோபோட்டிக் கருவியை அறிமுகப்படுத்தியது. “வேலிஸ்ட்” பிரசாந்த் மருத்துவமனையின் ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
அதன்பின், மேம்பட்ட 4-ம் தலைமுறை ரோபோட்டிக் கருவி” அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இத்திட்டம் மேலும் வலிமையடைந்தது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 3 ஆண்டுகளில், டாக்டர் எஸ். ஆறுமுகம் 1,000-க்கும் மேற்பட்ட ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
இச்சாதனை குறித்து தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மூத்த எலும்பியல் நிபுணருமான பத்மஸ்ரீ டாக்டர் மயில்வாகனன் நடராஜன் பேசுகையில், “1,000 ரோபோட்டிக் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருப்பது சாதாரண சாதனையல்ல. இதற்கு மிகப்பெரிய அர்ப்பணிப்பு, துல்லியம், அனுபவம் மற்றும் நோயாளிகளின் நலனை மேம்படுத்துவதற்கான வலுவான ஈடுபாடு ஆகியவை தேவை. டாக்டர் ஆறுமுகம் அவர்களின் இச்சாதனை உண்மையிலேயே பாராட்டத்தக்கது. இது அவரது அறுவை சிகிச்சை நிபுணத்துவத்தையும், மூட்டு மாற்று சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் பிரசாந்த் மருத்துவமனையின் தொலைநோக்குப் பார்வையையும் காட்டுகிறது. தென்னிந்தியாவின் எலும்பியல் மருத்துவத் துறையில் இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றமாகும்.” என்றார்.
மேலும் ராதிகா சரத்குமார் பேசுகையில், “நாம் சாதாரணமாக நடந்து செல்வதை ஒரு பெரிய விஷயமாக நினைப்பதில்லை.ஆனால், அது ஒரு சவாலாக மாறும் போதுதான் அதன் அருமை நமக்குத் தெரிகிறது. நோயாளிகள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் நடப்பதைப் பார்ப்பது, ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நவீன சிகிச்சைகளைக் கொண்டு வந்து, மக்கள் மீண்டும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதில் பிரசாந்த் மருத்துவமனை செய்து வரும் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த விழாவில் கலந்துகொள்வதிலும், இன்று இங்குள்ள ஒவ்வொரு நோயாளியின் உடல் வலிமையையும் நேர்மறையான எண்ணத்தையும் நேரில் காண்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.



