திருச்சி, ஜூலை 23 –
நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் தற்போது போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் திருச்சியிலும் போராட்டம் பல்வேறு தரப்பினராலும் இன்று நடைபெற்றது. திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகக் தூக்கிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தில்லியில் நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி விலகக் கோரி, கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதை அடுத்து போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாடு முழுவதும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் வலுத்து வருகின்றது. தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சிக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையம் சிக்னல் அருகே இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு திட்டமிட்டனர். இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் இந்த திட்டமிட்டபடி திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர்.
இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்களை கைது செய்ய முயன்றனர். இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட அவர்கள், மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



