தஞ்சாவூர், ஜூன் 12 –
தஞ்சாவூரில் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு ரத்த சோகை பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவமனை சுகாதாரப்பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அனைத்து சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு பதிவான தாய் மற்றும் சேய் இறப்புகள் அவற்றிற்கான முக்கிய காரணங்கள், தாய் இறப்பு விகிதம் மற்றும் சேய் இறப்பு விகிதம் ஆகியவற்றை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் இளம் பருவத்தினருக்கு ரத்த சோகை பரிசோதனை கண்டறிய அனைத்து பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. காச நோய் கண்டறிதல் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் பல்வேறு சுகாதார திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றில் உள்ள இடைவெளிகள் குறித்து விவரிவாக விவாதிக்கப்பட்டது. சுகாதார குறியீடுகளை மேம்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கண்டறியப்பட்ட குறைபாடுகளை உடனடியாக சரி செய்து திட்டங்களில் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் இணை இயக்குனர் (மருத்துவம்) முருகப்பன், மாவட்ட சுகாதார அலுவலர் கலைவாணி துணை இயக்குனர் (மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை) டாக்டர் அன்பழகன் ,துணை இயக்குனர் (காச நோய்) மாதவி, இராசா மிராசு தார் மருத்துவமனை துணை இயக்குனர் (தொழுநோய்) குணசீலன், மகப்பேறு டாக்டர் அமுதா மற்றும் குழந்தைகள் நல டாக்டர் செல்வகுமார், கண் புரை தடுப்பு மாவட்ட அலுவலர் ராஜா, மாநகர் நல அலுவலர் வீராசாமி, அனைத்து மருத்துவமனை தலைமை மருத்துவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சுகாதார அலுவலக இரண்டாம் நிலை அலுவலர்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



