நாகர்கோவில், ஜூலை 17 –
கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு அருகே ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், வீட்டருகே நடத்தி வந்த பெட்டிக்கடையில் குட்கா புகையிலை விற்றதாக கடந்த 9ந் தேதி கைது செய்யப்பட்டு நாகர்கோவில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் கடந்த 13ந் தேதி அதிகாலை அவர் இறந்த நிலையில், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சபரிவர்மன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவரை சிறையில் வைத்து தாக்கியதாக வார்டன்கள் ஜெகன், திருமலைநம்பி, சிவகுமார் ஆகிய 3 பேரும், 8 சிறை கைதிகளும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் சபரிவர்மனின் குடும்பத்தினர், அவரது பிரேத பரிசோதனை வீடியோவை தங்களுக்கு நம்பிக்கையுள்ள மருத்துவர்கள் மூலம் மறுஆய்வு செய்த பின்னரே அவரது உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர். இதனால் 4 நாட்களாக சபரிவர்மனின் உடலை பெற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு ஈத்தங்காட்டில் உள்ள சபரிவர்மனின் வீட்டிற்கு அமைச்சர்கள் ராஜேஷ்குமார், ஸ்ரீநாத், குமரி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், எஸ்பி ஸ்டாலின் ஆகியோர் சென்றனர். அவர்கள் சபரிவர்மனின் மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சபரிவர்மனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். அத்துடன் உடலை பெற்றுகொள்ள வேண்டும் என்றார். இதற்கு, உடற்கூறாய்வு வீடியோவை ஆய்வு செய்த பின்னர் பிரேத பரிசோதனையில் எங்களுக்குள்ள சந்தேகம் தீரும். அதன் பின்னர் உடலை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
அதன்படி இன்று சபரிவர்மனின் உடற்கூறாய்வு குறித்த வீடியோ காட்சிகளை அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் தரப்பிலான மருத்துவர் முன்னிலையில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், சந்தேகத்திற்கிடமான அம்சம் ஏதும் இல்லை என்பதை குடும்பத்தினர் ஒத்துக்கொண்டு உடலை வாங்க சம்பதித்தனர்.
சபரிவர்மன் இறந்து 5வது நாளான இன்று மாலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை பிணவறையில் இருந்து அவரது உடலை மனைவி ஆனந்தவல்லி மற்றும் உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். அவரது ஊரில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதனால் கடந்த 5 நாட்களாக நீடித்த சிறையில் கொலையான சபரிவர்மனின் பிரச்சினை முடிவிற்கு வந்தது.



