தேனி, ஜூன் 1 –
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (01.06.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, புதிய வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 291 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ரூ.2,03,600/- மதிப்பிலான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் 2 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.94,500/- மதிப்பிலான சக்கர நாற்காலி 6 நபர்களுக்கும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம்-1 மூலம் தலா ரூ.15,000/- வீதம் 5 முஸ்லிம் ஏழை மகளிர்களுக்கும், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கம்-1 மூலம் தலா ரூ.15,000/- வீதம் 5 கிறிஸ்துவ ஏழை மகளிர்களுக்கு சுயதொழில் தொடங்க காசோலைகளையும் என மொத்தம் ரூ.4,48,100/- மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை 18 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.ராஜகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) கவிதா, உதவி ஆணையர் (கலால்) பஞ்சாபகேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.எடிசன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



