ஈரோடு, மே 27 –
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 183 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டன. இதில் முதல் அமைச்சர் உத்தரவுப்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 41 கடைகள் மூடப்பட்டன. இது போக இப்போது 142 கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளில் கோர்ட்டு உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட 10 ரூபாய் கூடுதலாக வாங்கப்பட்டு அதில் 10 ரூபாய் காலி மது பாட்டில்களை ஒப்படைக்கும் போது குடிமகன்களுக்கு திருப்பி கொடுக்கப்படுகிறது. இதற்கு டாஸ்மாக் மதுபான ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த காலி மதுபான பாட்டில் களை வாங்குவதற்கு தனியாக ஆட்களை நியமித்து அவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகமே சம்பளம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக 142 டாஸ்மாக் மதுபான கடை ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஈரோடு சூரியம் பாளையத்தில் உள்ள மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த 2 நாட்களாக இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் மண்டல மேலாளர் ராஜ ராஜன் மாவட்ட மேலாளர் ரகுநாதன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. ஏற்கனவே 41 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ள நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளை தேடி அலைந்த நிலையில் இப்போது அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் திறந்து இருக்கும் கடைகளை தேடி மது பிரியர்கள் மதுபானங்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இது பற்றி மது பிரியர்கள் கூறும் போது: அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடனடியாக டாஸ்மாக் மதுபான கடைகளை திறந்து எங்களது ஏக்கத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.



