ராமநாதபுரம், ஜுன் 8 –
ராமநாதபுரம் திங்க் காஸ் நிறுவனம் மண்டல தலைவர் அழகுராஜன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 06.06.2026 அன்று ராமநாதபுரம் பாரதி நகரில், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடுவதற்காக வேலும்நிக்கம் நிறுவனத்தினர் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இயற்கை எரிவாயு குழாய் சேதமடைந்ததால் எரிவாயு கசிவு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து உடனடியாக திங்க் கேஸ் (Think Gas) நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் நிறுவனத்தின் அவசரகால பராமரிப்பு குழுவினர் துரிதமாக சம்பவ இடத்திற்கு சென்று, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் எரிவாயு கசிவை சரிசெய்தனர். தொடர்ந்து, எரிவாயு விநியோக சேவையும் வழக்கம்போல் மீண்டும் செயல்படுத்தப்பட்டது.
இயற்கை எரிவாயு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் திங்க் கேஸ் நிறுவனம் பல்வேறு ஊடகங்கள் வாயிலாகவும், விழிப்புணர்வு கூட்டங்கள், ஜேசிபி மற்றும் பிற இயந்திர இயக்குநர்கள் சங்கங்களுடனான கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டுமெனில், சாலை, நிலம் அல்லது பொதுப் பகுதிகளில் எவ்வித தோண்டும் பணிகள், கட்டுமானப் பணிகள் அல்லது ஜேசிபி மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளைத் தொடங்குவதற்கு முன்பாக பொதுமக்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் இயந்திர இயக்குநர்கள் திங்க் கேஸ் நிறுவனத்தை தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இயற்கை எரிவாயு குழாய்கள் தொடர்பான தகவல்கள், சந்தேகங்கள் அல்லது அவசர உதவிகளுக்கு எங்களின் கட்டணமில்லா உதவி எண் (Toll-Free Number): 1800 202 2999-ஐ தொடர்பு கொள்ளலாம். அவசர காலங்களில் எங்களின் 24×7 அவசர தொடர்பு எண்: +91 73582 53999-ஐ உடனடியாக அழைத்து தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு – விழிப்புணர்வுடன் செயல்படுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


