தக்கலை, மார்ச் 16 –
தக்கலை அடுத்த குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜோவின் (32). நேற்று முன்தினம் இரவு இவர் முட்டைக்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிக் கொண்டு இருந்தார். அப்போது கடை அடைக்க 15 நிமிடம் இருந்ததால் போட்டி போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் அவசரமாக மது வகைகளை வாங்கினர். ஜோவினும் மது வாங்கிக் கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் நின்று மர்ம நபர்கள் திடீரென ஆத்திரமடைந்து அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
தாக்குதலில் பின் தலையில் படுகாயம் அடைந்த ஜோவின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் ஜோவின் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.


