கோவை, ஜூலை 18 –
கோவை மாவட்டம் கோவை மாநகராட்சியில் மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரும் திரளாக வந்திருந்த திமுகவைச் சேர்ந்த 73 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சியின் ஐந்து கவுன்சிலர்களும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மதிமுக கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் கடந்தமுறை நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் தமிழக முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் புகைப்படங்களையும் வைக்க வேண்டும் என கடுமையாக வாதம் செய்தது அனைவருக்கும் தெரியும். அதன் பொருட்டு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் அரங்கில் தற்போதைய முதலமைச்சர் விஜய் படம் மட்டுமல்லாமல் முன்னாள் தமிழக முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் மாநகராட்சி கூட்டம் கவுன்சிலர்களின் காரசார வாக்குவாதத்துடன் துவங்கியது. அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களிடையே கடும் கோபத்துடன் விவாதித்ததால் அடிதடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது கோவை மாநகராட்சி 44 வது வார்டை சேர்ந்த காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி உரத்த குரலில் பேசிக் கொண்டே இருந்தார். மேலும் அவர் கூறுகையில்: கோவையில் கட்டி முடிக்கப்பட்டு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழி பூங்கா அமைக்கும் பணியில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேலாக ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்று இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டின் தொடர்பாக மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மேயர் இருக்கையை நோக்கி பாய்ந்து சென்றார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி. அப்போது மாமன்றத்தில் இருந்த திமுக கவுன்சிலர்கள் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரியை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
வாக்குவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போதே காங்கிரஸ் கவுன்சிலர் காயத்திரியின் கை மற்றும் சேலையை பிடித்து இழுத்து தடுக்க முற்பட்டனர் திமுக கவுன்சிலர்கள். அப்போது திமுக கவுன்சிலர்களை அக்கம் பக்கம் உதறி தள்ளிவிட்டு மேயர் மற்றும் கமிஷனரிடம் விளக்கம் கேட்க எட்டி குதித்தார். அப்போது காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர் இடையே கடுமையான தள்ளுமுள்ளும் கைகலப்பும் ஏற்பட்டது.
விடாது கருப்பு என்பது போல காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி சேலையை வரிந்து கட்டிக்கொண்டு தொடர்ந்து ஆக்ரோஷமாகவே மாநகராட்சி கூட்ட அரங்கில் கத்தினார். அப்போது காயத்ரிக்கு எதிராக கவுன்சிலர்கள் மீனா லோகு, சாந்தி முருகன் மற்றும் மாலதி ஆகியோர் கவுன்சிலர் காயத்திரியின் கையைப் பிடித்து இழுத்து சென்றனர். இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் சாந்தி, பிரபா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி, பூபதி, ஆகியோர் தங்கள் வார்டுகளில் நடக்கும் பல்வேறு பிரச்சனைகளை முன்னிறுத்தி மாமன்ற கூட்டத்தில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாமன்ற கூட்டம் தொடர்ந்து நடைபெற காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கோவை செம்மொழி பூங்கா அமைப்பதில் 40 கோடி ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட இந்த நிகழ்வு முறைப்படி விசாரணைக்கு வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



