நாகர்கோவில், நவம்பர் 17 –
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலை போல் தேங்கும் குப்பைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநகர பகுதியில் 11 நுண்ணூட்ட செயலாக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு, மக்கும் குப்பைகள் உரமாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகரப் பகுதியில் வீடுகள் தோறும் மக்கும் குப்பை, மக்கா குப்பை பிரித்து வழங்க மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. அதையும் மீறி மக்கும் குப்பை, மக்கா குப்பை கலந்து வருகிறது. மக்கும் குப்பை மக்காத குப்பை பிரிக்கும் வகையில் மாநகரப் பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை இந்தியா இயக்கம் ‘பொருள் மீட்பு வசதி மையம்’ அமைக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் ஸ்ரீ அவிட்டம் திருநாள் மகாராஜா மாநகராட்சி மைதானத்தில் ரூ. 85 லட்சம் செலவில் பொருள் மீட்பு வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை இன்று காலை மேயர் மகேஷ் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் முத்துராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


