குளச்சல், டிச. 8 –
திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (25). இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடன் விவாகரத்து ஆகி தனியாக தாயார் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில் நித்யாவுக்கும் குளச்சல் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (29) என்ற பெயிண்டருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திங்கள்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சுரேஷ்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து நித்யா இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணையில் முதல் மனைவியை விவாகரத்து செய்து நித்யாவுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். இதை நம்பி நித்யா, சுரேஷ் குமார் மீண்டும் ஒன்றாக வாழ தொடங்கியதில் மீண்டும் குழந்தை பிறந்தது.
நித்யாவிடம் இருந்து சுரேஷ்குமார் பல தவணைகளாக சுமார் 15 லட்ச ரூபாய் வாங்கி உள்ளார்.
இந்த நிலையில் சுரேஷ்குமாரின் செல்போனை பார்த்தபோது புதிய இன்ஸ்டாகிராம் உருவாக்கி திருமணம் ஆகி விவாகரத்தான பல பெண்களை குறிவைத்து காதலித்தது தெரிய வந்துள்ளது. இதை குறித்து நித்தியா கணவரிடம் கேட்டபோது பிரச்சினை ஏற்பட்டு, சுரேஷ்குமார் மனைவி நித்யாவை வீட்டிலிருந்து அடித்து துரத்தி விட்டார். மேலும் குழந்தை சுரேஷ்குமாருக்கு பிறக்கவில்லை என கூறி டார்ச்சர் செய்தனர்.
இந்த நிலையில் நித்யா, சுரேஷ்குமார் தன்னை வீட்டில் சேர்த்து கொள்ள கேட்டு சுரேஷ்குமார் வீட்டு முன் தர்ணாவில் ஈடுபட்டார். நித்யாவுக்கு துணையாக அவரது தாயார் ராணியும் உடன் சென்றிருந்தார். அப்போது சுரேஷ்குமார் மற்றும் அவர் தாய் லதா ஆகியோர் சேர்ந்து நித்தியா மற்றும் ராணியை சரமாரியாக தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் சுரேஷ்குமார் அவர் தாயார் லதா ஆகியோர் மீது பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.


