மதுரை, அக்டோபர் 30 –
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குரு பூஜையில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசு ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
திருநாவுக்கரசர் கூறுகையில்:
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை முன்னிட்டு காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை தலைமையில் தேவரின் நினைவிடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தி, வீரவணக்கம் செலுத்தி, மரியாதை செய்ய உள்ளோம். பசும்பொன் தேவர் அரசியல், ஆன்மீகத்தை இரண்டு கண்களாக பாவித்து அரசியல் வானில் கொடிகட்டி பறந்தவர்.
1952 தேர்தல் தொடங்கி ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு சில நேரங்களில் தொகுதிக்கு செல்லாமலேயே மக்கள் அன்பாலும், ஆதரவாலும் செல்வாக்காலும் மாபெரும் வெற்றியை பெற்றவர் பூரண பிரம்மச்சாரி. நேர்மைக்கும், ஒழுக்கத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த மாபெரும் தலைவர். அவர் ஒரு மாநில தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர். அப்படிப்பட்ட உன்னதமான மக்களின் அன்பை பெற்று மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து சுதந்திரத்திற்காக சிறை சென்று. தொடக்க காலத்தில் காங்கிரசை வளர்த்து பல்வேறு நிலைகளில் தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து, ஆன்மீகத்திலும் முத்திரை பதித்த தேவர் புகழ் வாழ்க என வாழ்த்துகிறோம் அவருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலியை, வீரவணக்கத்தை செலுத்துகிறோம்.
என்று கூறினார்.
அதன் பின்னர் பேசிய செல்வபெருந்தகை
எஸ்.ஐ.ஆர். குறித்த கேள்விக்கு:
பீகாரில் என்ன செய்தார்களோ எஸ்.ஐ.ஆர். தான் தமிழகத்திலும் செய்யப் போகிறார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பாஜகவின் திட்டம் என்னவென்றால் மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் வாக்களிக்கலாம் ஆன்லைனில் வாக்குரிமையை கோனலாம் என்று சொல்கிறார்கள். தேர்தல் ஆணையமும், பிஜேபிக்கு எங்கெல்லாம் ஆதரவாளர்கள் இருக்கிறார்களோ அனைவரையும் தமிழகத்தில் வாக்காளர்களாக மாற்றி ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதை தான் முதல்வர் தென்காசியில் பேசியிருக்கிறார். அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் எங்களைப் பொறுத்தவரை. எஸ்.ஐ.ஆர்.
ஐ எதிர்க்கிறோம் தமிழகத்திற்கு இது தேவையற்றது. இவ்வளவு காலமாக தமிழகத்தில் எப்படி தேர்தல் நடந்ததோ அதே போல் நடக்க வேண்டும். மாநில தொழிலாளர் ஆணையத்தில் உள்ள தரவுகளுக்கும், ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களும் ஒத்துவரவில்லை கோடிக்கணக்கான எண்கள் வித்தியாசம் உள்ளது. ஆகவே எஸ்.ஐ.ஆர். தற்போது தேவையற்றது.
நகராட்சி நிர்வாக மோசடி குறித்த கேள்விக்கு:
சட்டம் தன் கடமையை செய்யும். சட்டரீதியாக அதை எதிர்கொள்ள சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இருப்பார்கள். இதனை வைத்துதானே டெல்லியில் ஆட்சி நடத்துகிறார்கள். ஆகவே இதை எதிர்கொள்வதற்கு துறையின் சார்ந்த அமைச்சரும், அதிகாரிகளும் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.


