தென்காசி, செப்டம்பர் 6 –
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” பன் நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்ததாவது: பொது மக்கள் உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவையினை தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் துவக்கி வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரம் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், மகப்பேறு மற்றும் மகளிர் நலம், குழந்தைகள் நலம், இருதயவியல், நரம்பியல், தோல், பல், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம், இயன்முறை, நுரையீரல் மற்றும் இந்திய முறை மருத்துவம் ஆகிய அனைத்து வகையிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை போன்ற அனைத்து சேவைகளும் தகுதியுள்ளவர்களுக்கு ஒரே இடத்தில் கிடைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே பொது மக்கள் அனைவரும் முகாமிற்கு வருகை தந்து மருத்துவப் பரிசோதனை பெற்றுக் கொள்ளலாம். இம்முகாமில் தொழிலாளர் நல வாரியம் மூலம் 12 தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலார் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் , சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இம்முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கோவிந்தன், இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு. பிரேமலதா, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, தொழிலாளர் உதவி ஆணையர் கௌரி ஜெனிபர், வட்டார மருத்துவ அலுவலர் மரு. மகாலெட்சுமி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் கௌசல்யா, வீரசிகாமணி ஊராட்சிமன்ற தலைவர் அரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன் மற்றும் மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ பணியாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



