தென்காசி, நவ. 24 –
தென்காசி, இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.



