மார்த்தாண்டம் ஆக. 25 –
மேல்புறத்தில் கேஸ் கசிந்து பாஸ்ட் புட் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. செம்மாங்காலையை சேர்ந்தவர் அசின் பெல்மன் (30). இவர் மேல்புறம் சந்திப்பில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். இந்த கடை துவங்கி ஒரு வாரமாகியுள்ளது. நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சமையலறையில் உள்ள கேஸ் சிலிண்டரில் கேஸ் கசிந்து எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. கடை அழகுபடுத்துவதற்காக பொருத்தப்பட்ட மேல் பகுதி சீலிங் மற்றும் பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதனால் பலத்த நஷ்டம் ஏற்பட்டது.
உடனே குழித்துறை தீ அணைக்கும் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு அதிகாரி சந்திரன் தலைமையில் பொதுமக்கள் ஆதரவுடன் தீ அணைக்கப்பட்டது. கேஸ் சிலிண்டர் வெளியே கொண்டு வந்து திறந்த வெளியில் வைக்கப்பட்டது. தீ இருபுற கடைகளுக்கு செல்லாமல் தடுக்கப்பட்டது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அசின் பெல்மன் சமீபத்தில் குழித்துறையில் நடந்த வாவுபலி பொருட்காட்சியில் நுழைவு வாயில் அருகே பாஸ்ட்புட் கடை வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



