தஞ்சாவூர், ஜூலை 18 –
தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் செங்கழுநீர் ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம் 642 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம். முதல் கட்டமாக 8 கி.மீ தொலைவுக்கு கரை அமைக்கப்படுகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சாவூர் – பூதலூர் இடையே கள்ளப் பெரம்பூரில் உள்ள 642 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரியை வெட்டினார். இந்த ஏரி மூலம் கள்ளப் பெரம்பூர், ராயந்தூர் தென்னங்குடி, பிள்ளையார் நத்தம், சீராளூர், சக்கர சாமந்தம், வடகால் ஆகிய கிராமங்களில் 3,000 ஏக்கர் நேரடியாகவும், 2,000 ஏக்கரில் மறைமுகமாகவும் விவசாயம் செய்யப்பட்டது. இந்த ஏரியில் 1.50 டிஎம்சி நீரை தேக்கி வைக்கலாம்.
இந்த ஏரியில் இருபுற மட்டுமே கரைகள் உள்ளன. மற்ற இரு புறங்களிலும் கரைகள் இல்லாமல் இருப்பதால் முழுமையான நீர் தேக்க முடியவில்லை. எனவே இந்த ஏரியை சீரமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் எனப் பகுதியைச் சேர்ந்தவர்கள் 2018 ஆம் ஆண்டு செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழு என்ற அமைப்பை தொடங்கி ஏரியில் இரு கரைகளையும் பலப்படுத்தினர். மேலும் 2 கி.மீ தொலைவுக்கு எல்லை கரையை அமைத்தனர். அதன் பிறகு கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏரி சீரமைப்பு பணி நடைபெறவில்லை.
இந்நிலையில் இந்த ஏரியை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மீண்டும் களமிறங்கி உள்ளனர். அதன்படி மாவட்ட நிர்வாகம், கிராம மக்கள், மெகா பவுண்டேஷன் ஆகியவை இணைந்து தூர்வாரும் பணியை தொடங்கினர். பாசனக்காரரும், எம்பியுமான முரசொலி ரூபாய் 1 லட்சம் நிதி உதவி வழங்கிய சீரமைப்பு பணியை தொடங்கி வைத்தார். த.வெ.க சேர்ந்த தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன் ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கினார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன் தேவையான நிதி அளிப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பலரும் நிதி உதவி, பொருள் உதவி வழங்கினர்.
இதுகுறித்து செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் கூறியதாவது: தஞ்சாவூர் பகுதியில் மிகப்பெரிய ஏரியாக செங்கழுநீர் ஏரியை சீரமைத்து அதில் 4 புறமும் கரைகளை பலப்படுத்த முடிவு செய்துள்ளோம். ஏரியில் கரைகள் இல்லாத பகுதிகளில் 20 அடி அகலம் 6 அடி உயரத்திற்கு கரைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஏரியை சீரமைத்தால் 3,000 ஏக்கர் ஆண்டுக்கு 2 போகும் சாகுபடி செய்ய முடியும். வருங்காலத்தில் மழைநீர் சேகரிக்க முடியும். இரு மாதங்களில் இந்த பணிகள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



