தஞ்சாவூர், ஜூன் 5 –
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என்று தஞ்சாவூர் மாநகராட்சியின் கமிஷனராக பதவி ஏற்ற முதல் ஐஏஎஸ் அதிகாரி தீபனா விஸ்வேஸ்வரி கூறினார்.
தஞ்சாவூர் நகராட்சி கடந்த 2014ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல அதிகாரிகள் ஆணையர்களாக பணியாற்றிய நிலையில் தற்போது முதல் முறையாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையராக இருந்து கண்ணன் மாற்றப்பட்டு தீபனா விஸ்வேஸ்வரி நியமிக்கப்பட்டு அவர் பதவியேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: எனது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம். நான் 2019ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றியுள்ளேன். இதற்கு முன் எல்காட் நிறுவனத்தில் செயல் இயக்குனராக பணியாற்றி வந்தேன். தற்போது பணியிட மாற்றத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ளேன்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற அந்தஸ்தில் ஆணையராக பொறுப்பேற்றுள்ளது பெருமையாக கருதுகிறேன். மாநகராட்சியை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் பசுமை சூழல் நிலவுவது போல மாநகராட்சி பகுதிகளில் பசுமையாக்க திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும் தேவையான இடங்களில் அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். தெரு விளக்குகள் சாலை வசதிகள், குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை குழாய்களில் ஏற்படும் அடைப்புகள் உள்ளிட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காணப்படும் என்றார்.
இதனையடுத்து மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கண்ணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பலர் புதிய ஆணையரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.



