நாகர்கோவில், ஜூலை 16 –
கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பு, ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்று திறனாளியான அவரது கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி சிறையில் சபரிவர்மன் மயங்கி கிடந்ததாக அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சபரிவர்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
சபரிவர்மனை போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்ற சாட்டினர். மேலும் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீஸ் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேரில் விசாரித்தார். நாகர்கோவில் நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் சபரிவர்மன் சிறைக்குள் வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்தது.
நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் ஜெயில் வார்டன்கள் ஜெகன், சுரேஷ், சிவகுமார் ஆகிய 3 பேரை முதலில் கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் சபரிவர்மனை சிறை கைதிகள் 8 பேர் தாக்கியதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட வார்டன்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை கைதிகள் 8 பேரும் ஏற்கனவே நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இறந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் பிரதாப், போலீஸ் எஸ் பி ஸ்டாரின் ஆகியோர் சபரிவர்மன் வீட்டில் சென்று கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக ஆறுதல் கூறினர். இருப்பினும் அரசு நிவாரணம் அறிவிக்கும் வரை சபரிவர்மன் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று 4ம் நாளாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபரி வருமனின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த ஏ டி எஸ் பி கலையரசன் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



