சிவகங்கை, செப். 23 –
சிவகங்கையில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிகளுக்கான இணைய பாதுகாப்பு தொடர்பாக பெண் ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சியான அகல் விளக்கு நிகழ்ச்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்பு சிவகங்கை நகர் மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு 2025 ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: தமிழக அரசைப் பொறுத்தவரை இரு மொழிக் கல்வியை பின்பற்றுவதில் என்றும் உறுதியாக இருந்து வருகிறது. ஆனால் மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும் என நம்மை கட்டாயப்படுத்தி வருகிறது. இதற்காகவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு கல்விக்கு போதிய நிதியை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை மாணவர்கள் அரசு பள்ளியில் தான் அதிகம் படித்து வருகிறார்கள். தற்போது அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் ஆர்வமுடனும் நம்பிக்கையுடனும் படித்து வருகிறார்கள். பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரப்படுத்துவது தொடர்பாக சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். அதன் முடிவு வந்தவுடன் நல்ல முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். அப்போது பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.



