நாகர்கோவில், ஜூன் 29 –
குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் கட்டுமான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சேர்ந்த சரவணகுமார் (35), மதுரை மாவட்டம் தங்கபாண்டியன் (40) உள்ளிட்ட பலர் வேலை செய்து வருகின்றார்கள். நேற்று மாலை பணி முடிந்ததும் அவர்கள் இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் கைகலப்பாக மாறிய நிலையில் சக தொழிலாளர்கள் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கபாண்டியனை அவரது சொந்த ஊருக்கு செல்ல அறிவுறுத்தி, அவரை நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு சக தொழிலாளர்கள் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் நெல்லையில் நடைபெறும் ரயில்வே யார்டு பணிக்காக ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருந்ததால், அவரால் ஊருக்கு செல்ல முடியவில்லை. இதனால் தங்கபாண்டியன் மீண்டும் கட்டுமான பணி நடைபெறும் பள்ளி வளாகத்திற்கு திரும்பி வந்தார்.
அப்போது அங்கு சரவணகுமார் தூங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த தங்கபாண்டியன் அங்கிருந்த சிமெண்ட் கல் எடுத்து சரவணகுமாரின் தலையில் அடித்தார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை அடுத்து தங்கபாண்டி நன்கு இருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, சரவணன் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய தங்க பாண்டியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தங்கபாண்டியன் சொந்த ஊருக்கு தப்பிக்க முயன்றது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பஸ் நிலையம் சென்ற தனிப்படையினர் அங்கு பஸ்ஸுக்காக காத்து நின்ற தங்கபாண்டியனை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரை சுசீந்திரம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் சரவணகுமார் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரமடைந்து தாக்கியதை தங்க வேண்டி ஒப்புக்கொண்டார். பின்னர் தங்க பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



