தருமபுரி, ஜூன் 26 –
தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குறிஞ்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டு துறை சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டக்குழு குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மேலும் அவர்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. தருமபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் மூலம் செயல்படும் அன்பு கரங்கள் திட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் வழியாக பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் பள்ளியில் உள்ள தகுதியான குழந்தைகளை கண்டறிந்து திட்டத்தில் சேர்த்திட வேண்டும். மேலும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்திட வேண்டும்.
மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் வன்கொடுமை நடைபெறும் இடங்களில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படுத்திட வேண்டும் இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்தக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விஜயா, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன், குழந்தைகள் நலக்குழு தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் நிதி குழுமம் உறுப்பினர் கலைவாணி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சவுதாமணி, சமூக நலத்துறை அலுவலர் பவித்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



