தருமபுரி, ஜூன் 24 –
தருமபுரி மாவட்டம் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக வரும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவுகள் கலக்கப்படுவதால் தண்ணீர் பச்சை நிறத்தில் மாறியுள்ளது என புகார் எழுந்துள்ளது. இதில் அதிகப்படியான பாஸ்பேட் படிந்து இருப்பதால், தண்ணீரில் பாசி அதிகமாக பிடிக்கிறது.
இந்த நிலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் சுத்திகரிக்கப்படும் பணி 50 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீரின் அளவு தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் குடிநீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி, சிக்கனமாக கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்தே பயன்படுத்துமாறும், வீட்டு நீர் தொட்டிகளை சுத்தமாக பராமரிக்குமாறும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. குடிநீரின் நிறம், மணம் அல்லது சுவையில் ஏதேனும் மாற்றம் தென்பட்டால் உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இயல்பு நிலை திரும்பும் வரை மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.



