நாகர்கோவில், மார்ச் 25 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளை இன்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 15 வாக்கு சாவடிகளும், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 23 வாக்குச்சாவடிகளும் பதற்றமான மற்றும் கவனிக்கத்தக்க வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் சம்மந்தபட்ட வாக்குச்சாவடிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குளச்சல் சட்டன்ற தொகுதிக்குட்பட்ட குறும்பனை அருகில் உள்ள சரவிளை அரசு நடுநிலைப்பள்ளி, குளச்சல் நகராட்சிக்குட்பட்ட இலப்பவிளை அரசு உயர்நிலைப்பள்ளி, மாடத்திட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவிதாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி, மணலிக்கரை புனித ஜோசப் தொடக்கப்பள்ளி, தக்கலை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் திருவிதாங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கபடவுள்ள மாதிரி வாக்குச்சாவடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, அமைதியான மற்றும் நேர்மையான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவார்கள். பதட்டமான அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா வசதிகள் ஏற்படுத்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.
அதனடிப்படையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் எந்தவொரு அச்சுறுத்தலுமின்றி வாக்களிப்பதை தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள், காவலர்கள் உள்ளிட்டவர்கள் உறுதி செய்திட வேண்டும் என கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கோமதி, காவல்துறையினர், தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள், காவல்துறையினர் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



