சுசீந்திரம், ஜீன் 13 –
குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையும், புழக்கத்தையும் முற்றிலும் கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் தலைமையிலான போலீசார் சுசீந்திரம் பழைய ரெயில்வே ஸ்டேஷன் பகுதியில் தீவிர வாகன தணிக்கை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 வாலிபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் போலீசார் அவர்கள் வைத்திருந்த உடமைகளை சோதித்தனர். அதில் சட்ட விரோதமாக விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்த கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 3 பேரையும் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் தெங்கம்புதூர் வடக்கு அஞ்சுகுடியிருப்பை சேர்ந்த வினு வயது 29, சண்முகம் வயது 21, பால்குளம் பகுதியை சேர்ந்த முருகன் வயது 37, என்பது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டவர்களில் வினு மற்றும் முருகன் ஆகிய இருவரும் தூய்மை பணியாளர்களாக வேலை பார்த்து வருபவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது. என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை ஜாமீனில் விடுவித்தனர். அவர்களது வங்கி கணக்குகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.


