கிருஷ்ணகிரி, டிச. 12 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மயிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மோசமான நிலையால், அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்டும், ஒரு மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராததால், குழந்தைகள் இன்னும் ஆபத்தான பழைய கட்டிடத்திலேயே கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மயிலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் பயின்று வருகின்றனர். ஆனால், மையத்தின் கட்டிடம் மிகவும் பழமையாகி, சிமெண்ட் மேல் கூரை எந்நேரமும் பெயர்ந்து குழந்தைகள் மீது விழும் அபாய நிலையில் உள்ளது. கூரையின் சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இந்த சேதமடைந்த பழைய கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல், கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர்கள் கலந்து சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பழைய கட்டிடத்தின் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டும், சுகாதாரமற்ற சூழலைக் கருத்தில் கொண்டும், புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



