ராமநாதபுரம், ஜுன் 5 –
ராமநாதபுரம் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ராமநாதபுரம் நகர் செயலாளர் ஜே.ஆர்.பி.மணிகண்டன் தன் பதவியை ராஜினாமா செய்து கூறியதாவது: 2026 தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வியை சந்தித்ததின் விளைவாக ஒருங்கிணைந்த ராமநாதபுரம் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வேண்டுகோளின் படி ராமநாதபுரம் நகர் செயலாளர் ஆகிய நான் வகித்து வந்த நகர் கழகச் செயலாளர் பதவியை இன்று முதல் ராஜினாமா செய்கிறேன்.
மேலும் ராமநாதபுரம் நகர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் வகித்து வந்த பதவியை ராஜினாமா செய்து அடிப்படை பதவியில் இருந்தும் ஒட்டுமொத்தமாக விலகுவதாகவும் ஏழைகளின் தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஏழை எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 17 வயது முதல் உறுப்பினராக பயணித்து 2016 டிசம்பர் 5ம் தேதி அம்மாவின் மறைவிற்குப் பிறகு மக்கள் செல்வர் டிடிவி தினகரன் 2018 மார்ச் மாதம் 15ம் தேதி மேலூரில் தொடங்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உண்மை தொண்டனாக இணைந்து 2018 ஆர் கே நகர் இடைத்தேர்தல் முதல் 2026 நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வரை கழகத்தின் வெற்றிக்காக உண்மையாக உழைத்து கழகத்தின் மாவட்ட வர்த்தக அணி பொருளாளராக மாவட்ட வர்த்தக அணி செயலாளராக ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நகரக் கழகச் செயலாளராக பயணித்து வந்த நான் இன்று முதல் என்னை விடுவித்துக் கொள்கிறேன்”
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நாம் வாழ்க புரட்சித்தலைவி அம்மா நாமம் வாழ்க இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பயணித்த கழக உடன்பிறப்புகளுக்கும் ராமநாதபுரம் நகராட்சி நான்காவது வார்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்ட என் மனைவி தனபாண்டியம்மாள் அவர்களுக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து நகர் மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த நான்காவது வார்டு பொதுமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் உங்கள் மக்கள் சேவகராக உங்களுடன் பயணிப்பேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.



