தஞ்சாவூர், ஏப்ரல் 18 –
வருகின்ற 23ம் தேதி சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை திறன் குறைபாடு உடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சட்டசபை பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி நிலங்களிலும் வருகிற 23ம் தேதி வியாழக் கிழமை காலை 7 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்குப்பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்கும் பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்கள் வாக்கினை செலுத்திட ஏதுவாக பிரெய்லி எழுத்துருவில் தயாரிக்கப்பட்ட மாதிரி வாக்கு சீட்டுகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி தங்கள் வாக்கினை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் 1961 விதி (49 என்) ன் கீழ் பார்வைத் திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி வாக்காளர் தனது சார்பாகவும் தனது விருப்பத்திற்கு இணங்கவும், வாக்குப்பதிவு செய்வதற்காக 18 வயதுக்கு குறையாத ஒரு நபரை தன்னுடன் வாக்குப் பதிவு அறைக்கு அழைத்து செல்லலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



