நாகர்கோவில், பிப். 18 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) அணைகளில் நீர்நிலை மற்றும் மழை விபரங்கள் குறித்து தெரிவித்தார். விவசாயிகளின் முக்கியமான கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நெற்பயிருக்கு கூடுதலாக மார்ச் 1 முதல் 15 வரை தண்ணீர் தேவை என விவசாயிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தண்ணீர் திறந்துவிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும், வேளாண்மை இணை இயக்குநர் றற்றும் செயற்பொறியாளர் நீர்வளத்துறைக்கும் விவசயிகள் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருப்பதிசாரத்தில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ பருவங்களுக்கான புதிய நெல் ரகங்கள் வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. தென்னையை பாதிக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த தேவையான ஒட்டுண்ணிகள் திருப்பதிசாரம் ஆராய்ச்சி நிலையத்தில் உற்பத்தி செய்திட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் ரயில்வே துறை பணிகளால் பாதிப்படைந்துள்ள நீர்நிலைகளை சீரமைத்திட நீர்வளத்துறை மூலம் இரண்டு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து சீரமைப்பு பணிகளும் விடுபாடில்லாமல் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திட நீர்வளத்துறைக்கு மாவட்ட ஆடசியர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய்அலுவலர் பூங்கோதை, வேளாண்மை இணை இயக்குநர் எம்.ஆர்.வாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) எஸ்.கீதா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி, சார் ஆட்சியர் பத்மநாபபுரம் வினய்குமார் மீனா மற்றும் மாவட்டத்தின் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.



