குமரி மாவட்டம் தாழக்குடி வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை சரி செய்ய தாழக்குடி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முன் வந்து இணைந்து ரூ. 1 இலட்சம் நிதி திரட்டி இப்பணிகளை செய்து வருகிறார்கள்.
இப்பணிகளை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் நேரில் பார்வையிட்டு தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 10 ஆயிரத்தை இப்பணிகளுக்காக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினார். பின்னர் அவர் தெரிவிக்கையில்,
விவசாயிகளின் நலன் கருதி வீரகேரளப்பநேரி குளத்தின் தெற்கு மடையை அரசு கடந்த 4 ஆண்டுகளாக சரி செய்யாததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 4 ஆண்டுகளுக்கு முன்பாக வீரகேரளப்பநேரி குளத்திலிருந்து வருகின்ற தண்ணீர் நேரடியாக தெற்கு மடை வழியாக பாசனத்திற்கு சென்று வந்தது. இதன் வாயிலாக தாழக்குடி பகுதியிலுள்ள 1,200 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெற்று வந்தன. அதன் பின் தெற்கு மடையை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் பிறகு விவசாயிகள் மாற்றுப்பாதையில் மறுகால் வழியாக தண்ணீர் பாசனத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெற்கு மடையை திறப்பதற்கு எந்தவித நடவடிக்கையினையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே தாழக்குடி ஊர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று கூடி முடிவெடுத்து இப்பணியினை சிறப்புற மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது மறுகால் ஒடையினை சீர் செய்து, தண்ணீர் செல்லமுடியாத நிலைக்கு காரணமாக அடைப்புகள் உள்ளனவா என்பதை கண்டறிந்து அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று தீவிரமாக வருகிறது. தி.மு.க அரசு விவசாயிகளை ஏமாற்றும் அரசாக விளங்கி வருகிறது. இதனை விவசாயிகளும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.
உடன் தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் முத்துக்குமார், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் சாந்தினி பகவதியப்பன், தாழக்குடி பேரூர் கழகச் செயலாளர் பிரம்மநாயகம், தாழக்குடி முன்னாள் பேரூராட்சித் தலைவர் ரோகிணி, தாழக்குடி முன்னாள் பேரூர் கழகச் செயலாளர் அய்யப்பன், விவசாயிகள் ஒவையார், குமார், அழகப்பன் உட்பட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.



