தஞ்சாவூர், மே 19 –
தஞ்சாவூர் கே எம் சி துரித உணவகத்தில் குளிரூட்டி (ஏசி) சாதனம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார் 5 பேர் பலத்த காயமடைந்தனர். தஞ்சாவூர் மேரிஸ் கார்னர் அருகே கேஎம்சி துரித உணவகத் தில் உள்ள உணவு தயாரிக்கும் கூடத்தில் குளிரூட்டி சாதனத்தில் பழுது ஏற்பட்டது.
உணவகத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த குளுரூட்டியின் இயந்திரத்தை பழுது பார்க்கும் பணியில் மெக்கானிக்கான நாஞ்சிக்கோட்டை சாலை சேர்ந்த கணேசன் (43) ஈடுபட்டார். குளிரூட்டிக்கான வாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டபோது உருளையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அது வெடித்தது. இதனால் அந்த சாதனத்தின் பாகங்கள் சிதறியது மட்டுமல்லாமல் கட்டிடத்தில் இருந்த ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.
இந்த விபத்தில் கணேசன், இந்த பழுது பார்க்கும் பணி கண்காணித்துக் கொண்டிருந்த துரித உணவு ஊழியர்களான திருவையாறு அருகே உள்ள பொன்னாவரை பகுதியை சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), குழிமாத்தூரை சேர்ந்த சவேரியார் மகன் அருண் குமார் (26), இணைய வழி உணவு விநியோக நிறுவன ஊழியர்களான மனோஜிபட்டி வனதுர்க்க நகரை சேர்ந்த கலிய பெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பிரேம் (26, ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித் குமார் (22) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்த தஞ்சாவூர் தீயணைப்பு நிலைய வீரர்கள், தெற்கு காவல் நிலையத்தினர் நிகழ்விடத்திற்கு சென்று காயம் அடைந்த 6 பேரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரவி ராஜ் உயிரிழந்தார். மற்ற 5 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
விபத்து நடந்த இடத்திற்கு தஞ்சாவூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீஸ் வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே விபத்தில் காயமடைந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முரசொலி எம்பி, விஜய் சரவணன் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு நலம் விசாரித்து, உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் கேட்டுக் கொண்டனர்.



