நாகர்கோவில், ஜன. 24 –
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன் பிள்ளை (55). பஸ் டிரைவர். இவரது மகள் அபிநயா (20). சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். கடந்த 14ம் தேதி மாணவி அபிநயா தனது தந்தைக்கு போன் செய்து தோழி ஒருவரின் திருமணத்திற்கு செல்வதாகவும் திருமண நிகழ்ச்சி முடிந்து வந்ததும் போன் செய்வதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் அபிநயாவை தொடர்பு கொண்ட போது தோழி வீட்டில் இருப்பதாகவும் கல்லூரிக்கு செல்லவில்லை என்றும் கூறிவந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 19ம் தேதி வேறொரு செல்போனில் இருந்து வாட்ஸ் அப்பில் அழைத்து பேசிய நபர் ஒருவர் உனது மகளை பார்க்க வேண்டும் என்றால் உடனடியாக தர்மபுரி பஸ் நிலையத்திற்கு வருமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டார். அபிநயா செல்போனை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இது குறித்து நீலகண்ட பிள்ளை வடசேரி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளதால் வடசேரி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிந்து சேலம் மாவட்டத்திற்கு அனுப்பி உள்ளனர்.


