நாகர்கோவில், மே 15 –
நாகர்கோவில் அருகே உள்ள என் ஜி ஓ காலனி, மணிக்கெட்டி பொட்டல் சுடலை ஆண்டவர் கோவில் சன்னதி தெருவை சேர்ந்தவர் அன்பையா. இவர் என்ஜிஓ காலனி காமராஜர் சாலையில் நகைக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அன்பையா வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதை அடுத்து நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த கும்பல் அன்பையாவின் நகைக்கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்பு அந்த கும்பல் சேர்ந்தவர்கள் நகைக்கடையில் இருந்த 30 பவுன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 1கிலோ ஐம்பொன் போன்ற பொருள்களை திருடி சென்றனர்.
இது குறித்து அன்பையா அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். அவர்கள் நகைக்கடை மற்றும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் கொள்ளைகளின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. அந்த அடையாளங்களை வைத்து நடத்திய விசாரணையில் கொள்ளை ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த மாயா கிருஷ்ணன் (38) மற்றும் காரைக்கால் மடம் பகுதியை சேர்ந்த கணேசன் (36)ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


