நாகர்கோவில், அக். 29 –
நாகர்கோவில் மாநகரில் சிறு மழைக்கே தாக்குபிடிக்க முடியாத சாலைகள்; விழுந்து, எழுந்து செல்லும் வாகன ஓட்டிகள் அல்லல் படும் மாநகர மக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி முழுவதும் சாலைகள் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர் பல விபத்துகளும் தினந்தோறும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு கிரைஸ்ட் சர்ச் அருகே உள்ள சாலை பல வருடங்களாக குண்டு குழியுமாக உள்ளது. பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்தும் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும் மக்கள் வரிப்பணத்தில் சொகுசு கார்களில் அதிகாரிகள் வலம் வருவதால் என்னவோ இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் போன்றவர்களின் கஷ்டம் இவர்களுக்கு புரிவதில்லை.
ஏற்கனவே இந்த பகுதியில் சாலை ஓரத்தில் வடிகால் ஓடை இருந்துள்ளது ஆனால் தற்போது தார் சாலை அமைக்கும்போது வடிகால் ஓடையை அடைத்து சாலை அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் மழைநீர் வடிந்து செல்ல முடியாமல் தண்ணீர் தேங்கி சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுவதால் தினம்தோறும் விபத்துகளும் ஏற்படுகிறது.
இந்த சாலை வழியாகத்தான் பள்ளி மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள், அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்கள் போன்றவர்கள் செல்ல வேண்டி உள்ளது. எனவே உடனடியாக சாலையில் மழைநீர் தேங்காதபடி சாலை ஓரத்தில் ஓடை அமைத்து பழுதாகி காணப்படும் சாலையை செப்பணிட்டு பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள சாலையில் தண்ணீர் தேங்கி சாலை சேதலமடைந்து வருவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தின தமிழ் காலை நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது.
இருப்பினும் இப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதியும், மாநகராட்சி அதிகாரிகள், ஆணையர், மேயர் போன்றவர்கள் இப்பகுதியை பார்வையிடாமல் அலட்சியம் காட்டியதன் விளைவு தினம்தோறும் இப்பகுதியில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் அருகிலுள்ள மதில் சுவர்களைப் பிடித்துக் கொண்டு இப்பகுதியை கடந்து செல்வது பார்ப்போரை வேதனையடைய செய்துள்ளது. எனவே
மாநகராட்சி இதில் முழு கவனம் செலுத்தி இதுபோன்று பழுதடைந்து காணப்படும் சாலைகளை கண்டுபிடித்து செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.



