சுசீந்திரம், ஜுலை 11 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் சாலை வழியாகத்தான் தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவகுளம், கண்ணன் குளம், புது கிராமம், தண்டநாயகன் கோணம், கருப்புக்கோட்டை, குறண்டி, மாங்குளம் சுற்று வட்டார பொதுமக்கள் சுசீந்திரம் மெயின் சாலை செல்கின்றனர். இந்தச் சாலையின் மேல் நான்கு வழிச்சாலைக்காக பாலம் போடப்பட்டது பாலம் போட்ட பின்பு பாலத்தின் கீழ் சுமார் இரண்டு அடி பள்ளம் போடப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது.
அதுமட்டுமின்றி பால வேலை நடைபெறும் பொழுது உயர் ரக இயந்திரங்கள் மூலம் பாலம் வேலை செய்யப்பட்டதின் காரணமாக சாலையும் ஆங்காங்கே பள்ளம் நிறைந்து காணப்படுகின்றது. இதனால் நான்கு வழிச்சாலைக்கு துணை சாலை வழியாக செல்வதற்காக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்களும் நிலை தடுமாறி வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி தினந்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதில் சில தினங்களுக்கு முன்பு கீழத் தேரூரில் இருந்து ஒரு நபருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் காயம் காரணமாக பேச முடியாத சூழ்நிலையில் உள்ளார். அதுபோல தேரூர் கஸ்தூரிபாய் கிராமத்தில் உள்ள நபர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய நிலையில் உள்ளார்.
இதுபோல விபத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று மாலையும் ஒரு ஆட்டோ நான்கு சக்கர வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தினந்தோறும் இந்த வழியாகச் செல்லும் நபர்கள் விபத்தில் சிக்குவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தை வந்து ஆய்வு செய்து விபத்து பகுதி அறிவிப்பு பலகை வைத்து சாலையை செப்பனிட்டு தர அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லை என்றால் பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.



