நாகர்கோவில், மார்ச் 27 –
நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு கன்னியாகுமரி தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்ற 5 தொகுதிகளில் 4 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியும், ஒரு தொகுதியில் தாமரை சின்னத்தில் தாமாக கட்சியும் போட்டியிடுகிறது.
ஆறு தொகுதிகளில் மாவட்டத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் அதிமுக பெற்றுள்ளதால் அக்கட்சியின் மாவட்ட செயலாளரான தளவாய் சுந்தரம் எம்எல்ஏவுக்கு எதிராக முன்னாள் நாகர்கோவில் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் போர்க்கொடி தூக்கி உள்ளார். சுயநலம் கருதி ஒரு தொகுதியை மட்டும் தளவாய் சுந்தரம் பெற்றுக் கொண்டுள்ளார் என புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் உள்ள காமராஜர் சிலையின் மேல் பகுதியில் தளவாய் சுந்தரத்திற்கு எதிராக போஸ்டர் தொங்க விடப்பட்டிருந்தது. அதில் நாடார் சமூகத்தை ஒதுக்கும் தளவாய் சுந்தரத்தை வன்மையாக கண்டிக்கிறோம் என எழுதப்பட்டிருந்தது.
இந்த இதற்கிடையில் நேற்று வடசேரி எம்ஜிஆர் சிலைமுன் தளவாய் சுந்தரத்தின் படத்தைக் கிழித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட இணை செயலாளர் லட்சுமி நாராயணன் என்பவர் வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தூண்டுதலின் பேரில் சிலர் வடசேரி எம்ஜிஆர் சிலை முன்பு வாகனத்தை மறித்து, கும்பலாக தளவாய் சுந்தரம் படத்தை கிழித்து பொதுத் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த புகாரின் பேரில் நாஞ்சில் முருகேசன் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


