மார்த்தாண்டம், ஜன- 9
மார்த்தாண்டம் அருகே மேக்காமண்டபத்தை சேர்ந்த 31 வயது இளம்பெண் ஒருவரின் 14 வயது மகள் அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். அதேபோல் இடிந்தகரை, சுனாமி நகர் பகுதி சேர்ந்தவர் ஜார்ஜ். அவருக்கு அந்த மாணவிக்கும் பழக்கம் உள்ளதாகவும், அதன்படி இரண்டு பேரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினம் மாணவி தனது பாட்டி வீடு சென்றுள்ளார். அங்கு தங்கியிருந்த மாணவி அடுத்த நாள் காலை தனது வீட்டுக்கு செல்வதாக கூறியதால், பாட்டி மாணவியை பஸ் ஏற்றி அனுப்பி உள்ளார். இதை அடுத்து மறுநாள் பாட்டி தனது மகளிடம் செல்போனில் பேசிய போது மாணவியை அனுப்பி உள்ளதாக மகளிடம் கூறியுள்ளார்.
அந்த இளம் பெண் மகள் வீட்டிற்கு வரவில்லை என்பதை தாயிடம் கூறியுள்ளார். இதனால் இருவரும் பல இடங்களில் தேடினர். அப்போது மாணவியுடன் நெருங்கி பழகிய ஜார்ஜ் என்பவரிடம் மாணவி தங்கியிருக்க வேண்டும் என்ற தகவலின் அடிப்படையில் இருவரும் ஜார்ஜ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு ஜார்ஜ் மாயமாகி இருந்தார்.
எனவே பஸ்ஸில் ஏறிய தனது மகளை நடுவழியில் இறங்க வைத்து ஆசை வார்த்தை கூறி ஜார்ஜ் கடத்தி சென்று விட்டதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இளம் பெண் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உண்மையிலேயே ஜார்ஜ் அந்த மாணவியை கடத்தி சென்றாரா? இரண்டு பேரும் எங்கு தங்கியுள்ளனர்? என்பது தொடர்பாக அவர்கள் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


