களியக்காவிளை, அக். 22 –
களியக்காவிளையில் தனியார் பொறியியல் கல்லூரி பேருந்தில் சீட்டில் அமர்ந்த நிலையில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் படந்தாலுமூடு பகுதியில் பல்வேறு தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கல்லூரி பேருந்துகள் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பார்க்கிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஓட்டுநர் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தாணு பிள்ளை (62). இவர் வழக்கம் போல மாணவர்களை ஏற்றி கல்லூரிக்கு செல்லும் நேரம் தாண்டியும் பேருந்து நிறுத்தும் இடத்திலேயே நின்று கொண்டிருந்ததால் சந்தேகம் அடைந்து மற்றொரு ஓட்டுநர் சென்று பார்த்த போது அவர் பேருந்தில் இருக்கையில் படுத்தபடி மயக்கம் அடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து 108 ஆம்புலன்ஸ் மற்றும் களியக்காவிளை காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்து செவிலியர்கள் மயக்க நிலையில் இருந்த ஓட்டுநர் தாணுபிள்ளையை பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து களியக்காவிளை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் இவர் மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தால் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. தனியார் பொறியியல் கல்லூரி ஓட்டுநர் கல்லூரி பேருந்திலேயே இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



