பழமைவாய்ந்த திருவாவடுதுறை ஆதீனத்தின் 24-வது குருமகா சன்னிதானமாக உள்ளவர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள். இவர் மார்கழி மாதம் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் மார்கழி மாதம் 11 ஆம் தேதியான இன்று அவர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில், ஐயாறப்பர் கோயில், மார்க்கசகாயேஸ்வரர் கோயில் மற்றும் மன்னம்பந்தல் ஆலந்துறையப்பர் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். ஆலந்துறை அப்பர் கோயிலில் திருவாவடுதுறை ஆதீனகர்த்தருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆலந்துறையப்பர் சன்னதி மற்றும் அஞ்சல்நாயகி அம்மன் சன்னதி ஆகியவற்றில் அவர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக அவர் கோ பூஜை செய்து வழிபாடு நடத்தினார். இதில் ஆதினக் கட்டளை தம்பிரான் சுவாமிகள், திருவாவாடுதுறை ஆதீன பொது மேலாளர் ராஜேந்திரன், மாயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, திருவிடைமருதூர் கோயில் மேலாளர் ஸ்ரீராம், மன்னம்பந்தல் கிராம மணியார் கனகராஜ்,பொறியாளர் பாலாஜி, மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.



