நாகர்கோவில், பிப்ரவரி 21 –
தமிழ்நாட்டின் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துணை முதலமைச்சராகவும் பதவி வகித்தவர். இது போக 2001- விருந்து இந் நாள் வரை 5 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். எதிர்கட்சி தலைவர், துணைதலைவர் என்றெல்லாம் இருந்தவர் ஓபிஎஸ்.
அவர் திமுக பக்கம் சாய்ந்து முதலமைச்சர் முக ஸ்டாலினினை சந்தித்து ஆதரவு கரம் நீட்டியதோடு, ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சி சிறப்பு என்றும் தெரிவித்தது, அரசியல் தளத்தில் பேசும் பொருளாகி உள்ளது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்து, அதிமுகவின் பொருளாளர், அதன் பின்னர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று பெரும் பதவியை வைத்திருந்தவர். அதிமுகவிலிருந்து வெளியேற்றப் பட்ட ஓபிஎஸ் இனிமேலும் தனிக்கட்சி தொடங்காமல் இருக்கிறாரே, அவரை நம்பி சென்றவர்களின் வாழ்க்கை என்னவாகும் என்கிற கேள்வி பலருக்கும் எழும்பியது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் சட்டசபை வளாகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவு கரங்களை உயர்த்தியிருக்கிறார்.
மேலும் வெளியே வந்த ஓபிஎஸ் பத்திரிகையாளர்கள் மத்தியிலும், முக ஸ்டாலினின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பு என்றும் புகழ்ந்து தள்ளி விட்டார். போதாகுறைக்கு ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏயான உசிலம்பட்டி ஐயப்பனும் சட்டசபையிலேயே முக ஸ்டாலினின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லி திமுகவின் கவனத்தை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். ஏன் இந்த அரசியல்? எடப்பாடி பழனிசாமியை மட்டும் விழ்த்துவதற்காக இந்த அரசியலா? அல்லது வேறு காரணமும் இருக்கிறதா? என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.
அதிமுக எடப்பாடி பழனிசாமியை மட்டும் வீழ்த்த இந்த முடிவை எடுக்கவில்லை. பாஜக மற்றும் சசிகலா, தினகரன் போன்றோருக்கும் அதிரடி வைத்தியம் கொடுப்பதை போன்றே ஓபிஎஸ் முடிவு அமைந்துள்ளது. பாஜக தலைமையை ஓபிஎஸ் பெரிதும் நம்பியிருந்தார். அதிமுகவை மீட்டு பாஜக தலைமை தனக்கு தந்து விடும் என்று நினைத்தார். அது பொய்த்து போனது. சில இடங்களில் பாஜகவும் ஓபிஸை புறந்தள்ளிய சம்பவங்களும் நடந்தேறியுள்ளது. மேலும் தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுக எடப்பாடி பழனிசாமி பக்கமே நிற்பதும் தான் ஓபிஎஸ் முடிவை மாற்றுவதற்கு ஒரு காரணம் என்கிறது அரசியல் வட்டாரம்.
மேலும் சசிகலா, தினகரன் போன்றோரின் ஆதரவு தனது தலைமையை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவிற்கு இல்லை. வயதும் 75 ஐ கடந்து விட்டது. இனிமேலும் தனிக்கட்சி தொடங்கி, வளர்தெடுத்து தனிப்பட்ட செலாவாக்கில் ஆட்சி அமைக்க முடியுமா? என்றால் அது இயலாத காரியம். எனவே தான் நன்றாக ஆலோசித்து தான் ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்திருக்கிறார். இது அதிரடியாக எடுத்த முடிவாக தெரியவில்லை. பல மாதங்கள், ஆண்டுகளாக யோசித்து எடுக்கப்பட்ட முடிவாக தான் தெரிகிறது.
இன்னும் சொல்லப்போனால், எடப்பாடி பழனிசாமியால் தான் அதிமுக வேஷ்டி கூட கட்ட முடியாமல் போய் விட்டதே என்கிற ஆதங்கமும் ஓபிஎஸ் யிடம் இருக்கத் தான் செய்கிறது.
திமுக நல்லுறவை ஓபிஎஸ் ஆதரவுகளும் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் ஒரு முது பெரும் அரசியல் வாதி. 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் கொண்டவர். அதிமுக தலைமை தனக்கு கிடைக்கவில்லை என்றதுமே அவர் முடிவை மாற்றிக் கொண்டார். தனி கட்சி தொடங்குவது போல் எந்த செயல்பாட்டையும், எப்போதும் காட்டியதில்லை. அவருக்கு நம்பிக்கைக்கு உரியவராகளாக இருந்தவர்கள் அவரவர் பிடித்த கட்சிகளுக்கு சென்றிருக்கிறார்கள். அதையும் ஓபிஎஸ் எதிர்க்கவில்லை. பிரிந்து சென்ற அனைவருக்குமே நல்வழி தான் காட்டியுள்ளார். அவரை நம்பியவர்கள் யாரும் கெட்டு போக வில்லை என்று தான் சொல்லுகிறார்கள்.
ஓபிஎஸ் – திமுகவுடன் நல்லுறவு வைத்திருப்பது அதிமுகவுக்கு பெரிய சரிவை ஏற்படுத்தும் என்று சொல்லுகிறார்கள் அரசியல் கருத்தாளர்கள். அதுமட்டுமின்றி சசிகலா, தினகரன் போன்றோருக்கும் அரசியல் எட்டாக் கனியாக தான் மாறக் கூடும் என்று தெரிகிறது.
ஓபிஎஸ் ஸின் தனிப்பட்ட செல்வாக்கை திமுக தான் புரிந்து வைத்துள்ளது. இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஓபிஎஸ் சுயேட்சை வேட்பாளராக களம் கண்டார். அந்த தேர்தலில் 3.43 இலட்சத்திற்கும் மேலாக அதிக வாக்குகளை வாங்கி இரண்டாவது இடத்தை பெற்றிருந்தார்.
அதிமுக வேட்பாளர் ஒரு இலட்சம் வாக்குகள் கூட வாங்கவில்லை. ஓபிஎஸ் ஸூக்கு இன வாக்குகள் அதிகமாக இருப்பதாக திமுக நம்புகிறது. எனவே ஓபிஎஸ் திமுக பக்கம் வந்தால் அடுத்த அமைச்சரவையில் துரைமுருகன் இடத்தில் நிதியமைச்சராக வைத்து அழகு பார்த்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை, என்கிற பேச்சும் உலா வருகிறது.



